Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

                நியூ டெல்லி இரயில் நிலையம்.  பன்னிரண்டாவது ப்லாட்ஃபார்ம் என்ற உடனேயே அனைவருக்கும் நினைவிற்கு வருவது தமிழ்நாடு எக்ஸ்ப்ரெஸ் தான். அன்று நான் திரும்பும்போது ஆறு வருடத்திற்கு முன்பு கல்லூரியில் இருந்து சுற்றுலா வந்த சமயம் நிகழ்ந்த சம்ப்வம்தான் நினைவிற்கு வந்தது. முதல் முறையாக அரைகுறை மொழியறிவோடு தமிழகம் விட்டு வெளியேறும்போது 18 வயது இளைஞனின் மனதில் இருக்கின்ற ஒரு பாதுகாப்பின்மையும் தான் நினைவிற்கு வந்தது. அந்த கசப்பான நினைவை மனத்தில் அசைபோட்டுக் கொண்டு வண்டிக்குள் ஏறி அமர்ந்தேன்.

                இன்று டில்லியில் வசிக்கும் முக்கியத் தமிழ்க்குடிமகன்களுள் நாமும் ஒருவர். ஒரு விதத்தில் டில்லித் தமிழ் மாணவர்களின் பாதுகாவலன் என்று கூட சொல்லுவார்கள்.  பூமி உருளும் வேகத்தில் மனிதர்கள் மட்டும் அங்குமிங்கும் பந்தாடப் படவில்லை அவர்களுடைய மதிப்பும் மன உணர்வுகளும் தான் எங்கெங்கெல்லாம் தூக்கி எறியப் படுகிறது. அது பயண காலம் அல்லாததால் வண்டியில் கூட்டம் குறைவே.  இரவுக்குள் மனதும் எதையோத் தேடியவாறு உறங்கி விட்டது.

                காலையில் எழுந்ததும் படிப்பதற்காக கொண்டு வந்திருந்த            ந. காமராசுவின் ‘கருப்பு மலர்கள்’  கவிதைத் தொகுதியைக் கையில் எடுத்தேன். சுவடுகள், ஞானக் குளியல் போன்ற கவிதைகளை முடித்தேன். குறியீடு, படிமம் என கவிதை முழுவதும் அந்த காலத்தின் புதிய உத்திகள். நாம் எப்போது இப்படியெல்லாம் எழுதப் போகிறோம் என்ற ஏக்கத்தோடு அடுத்தக் கவிதையை வாசித்தேன். ‘காகிதப் பூக்கள்’ -

                     தாய்ப்பெண்ணோ முல்லைப்பூ

                     தனிமலடி தாழம்பூ

                     வாய்ப்பந்தல் போடுகின்ற நாங்கள்

                     காகிதப் பூக்கள்

விடுபட்ட திருநங்கைகளைப் பற்றி எவ்வளவு உணர்ந்து எழுதியுள்ளார்!

                வண்டி நாக்பூரை அடைந்தது. சாப்பிட இறங்கிச் சென்றபோதுதான் முதல் பயணத்தின் போது அங்கு நடந்த இன்னுமொரு சம்பவம் நினைவிற்கு வந்தது. என் நண்பன் ஒருவன் அந்த குளிர்காலத்தில் கோட் சூட் போட்டிருந்த ஒரு சாய்வாலாவிடம் ஆங்கிலத்தில் ஏதோ கேட்க அவன் பதிலுக்கு ‘கியா?’ என்று வினவினான்.  உடன் அனைவரும் ‘டேய் அவன் குளிருக்கு கோட் மாட்டியிருக்கான். உடனே அவனை இங்க்லீஸ்காரன்னு நினைச்சிடுவியே’ என்று ஓட்டித் தள்ளினோம். இதே நண்பனைத்தான் பின்பு டில்லியில் நாங்கள் இறங்கும்போது ஐந்தாறு திருநங்கைகள் சூழ்ந்து கொண்டு பணம் பறிக்க முயன்றனர்.  அவனைக் காப்பாற்றுவதற்குள் நாங்கள் பட்ட பாடு!  கண்ட இடத்தில் கைவைத்து அவனைக் கொஞ்சம் மான பங்கம் வேறு செய்தனர். கல்லூரிகாலம் முடியும்வரை அவனை அதைச் சொல்லி ஓட்டாத நாளில்லை.

                சாப்பிட்டுவிட்டு வண்டிக்குள் ஏறும்போதுதான் ஒரு நடுத்தர வயது பிராமணர் ஏறி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். பேச்சுத் துணைக்கு ஆளில்லை என்றதும் என் வாயைக் கிளறினார், தன்னைப் பற்றி உளறினார். நானும் வேறு வழியில்லாமல் உட்கார்ந்திருந்தேன்.  “இந்த காலத்து மந்திரியெல்லாம் இருக்காளே எங்க மத்தவாளைப் பத்தி யோசிக்கிறா!  தன் வேலையானா போதும்னு போயிண்டே இருக்கா.. வெரி கரப்ட் அண்டு இன்சென்சிடிவ் யு நோ..!  நாட்டை எங்கே கொண்டு வந்து சேத்துட்டா பாத்தேளா! ” என அடுக்கிக் கொண்டே போனார்.  நமக்கும் சற்று கோபம் அதிகமாக வரவே -

                  “ஏன் சார் யாரோ சிலர் செய்த தப்புக்கு எல்லாரையும் குற்றம் சொல்வது எப்படி நியாயம்? சுதந்திரம் வாங்கினப்போ  இருந்த நாடு கிடந்த கிடைக்கு இப்போ எவ்வளவு முன்னேறி இருக்கோம். மேலும் மந்திரிகளை நாற்காலியில் அமர வைப்பதே நாமதான்.  அப்படி இருக்கும்போது பழியை அவர்கள் மேலே போடுவது எந்த விதத்துல நியாயம். டெமாக்ரஸில அரசு நம்முடையது. அப்படி இருக்கும்போது நடக்கிற ஒவ்வொரு நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாம தானே பொறுப்பெடுத்தாக வேண்டும். ” என்று நமக்குத் தெரிந்த அரசியலை வைத்து அவரை மொக்கை போட்டேன். கொஞ்ச நேரம் அவரும் எதுவுமே பேசாமல் வந்தார்.

                 திடீரென்று இரண்டு திருநங்கைகள் இரயிலில் வாலிபர்களைத் தேடி பணம் பறித்துக் கொண்டு வந்தனர்.  ஏற்கனவே ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவம் கற்றுத் தந்த பாடம் – புத்தகத்திற்குள் முகம் புதைத்து கண்டு கொள்ளாமல் இருந்தேன்.  வந்தவர்களுள் ஒருவர் தனது மேலாடையை எனக்கு மட்டும் தனது நிர்வாணம் தெரிவது போல் தூக்கி ‘தேக் ….. தேக் …  ‘ என்றார்.  நான் அறுவறுத்து கண்களை மூடிக் கொண்டு ‘ஜா’ என்று கத்தவே ஒருவர் சென்றுவிட்டார். இன்னொருவர் மட்டும் என்னருகே வந்து என் நாடியைப் பிடித்துக் கொண்டு தமிழிலேயே ‘ஏம்பா?‘ என்றார்.  நான் அதிர்ச்சியுற்று அவரை நிமிர்ந்து பார்க்கையில், தன் உணர்வுகளே தன்னை இந்தச் சமூகத்தில் இருந்து சிறைபடுத்திவிட்ட துக்கமும் ஏக்கமும் கண்ணில் தோன்ற  என்னைப் பார்த்தார். இரெண்டு நிமிடம் கழித்து சென்றுவிட்டார்.

               “ஏன் சார் யாரோ சிலர் செய்கிற தப்புக்கு எல்லாரையும் குற்றம் சொல்வது எப்படி நியாயம்?”   நான் சொன்ன வார்த்தைதான் சுட்டது.

அயனாவரம் ஒரு Flashback

                சென்னையை அடுத்து கொஞ்ச வருடங்களுக்கு முன்னாடி அதாவது சோழர் காலத்துல (எந்த சோழர்னு இன்னும் சரியா தெரியல) ஒரு பெரிய சிவன் கொயில் ஒன்று கட்டினாங்க. அதற்கு பரசுராம லிங்கேஸ்வரர் ஆலயம்னு பெயர் வச்சாங்க. அந்தக் கோயிலைப் பார்த்தீங்கன்னா ஒரு பெரிய குளத்துக்கு நடுவே இருந்தது.

                அதுல என்ன ஒரு சிறப்புன்னா அங்க இருந்த மூலவர் சுயம்பு. பரசுராமர் அம்மாவைக் கொன்ற பாவத்தைத் தீர்க்க இங்க காட்டுல திரியும்போது இந்த சுயம்பு லிங்கத்தைப் பார்த்து அந்தக் குளத்துல இருந்து தண்ணீர் எடுத்து தினம் திருமஞ்சனம் செய்து தவம் இருந்து சாபவிமோசனம் அடைஞ்சதா சொல்லுறாங்க. நம்ம சிவனும் இவருடைய பக்தியில் மெய்மறந்து, “இனி என்னையே உன் பெயர் கொண்டு அழைக்கட்டும்னு” வரத்தை கொடுத்துட்டு அமர்ந்திட்டாராம். (இங்க பாருங்க, பரசுராமர் வடக்கத்தவர் அவரு எப்போ சென்னை வந்தாருன்னு கேட்க கூடாது. பெரிசுங்க கல்வெட்டுல எழுதிப் போட்டிருக்கிறதைச் சொல்கிறேன்).

                நம்ம பரசு இப்படி போன பிறகு, நம்ம பிரம்மா இருக்கிறாரு இல்லையா அதுதாங்க ‘அளப்பவனில்லை ஆக்குபவன்’ அவரு சொர்க்கத்துல சிறிசா ஒரு பொய் சொல்லி மாட்டி கிட்டாரில்லையா அவரையும் சபிச்சு புட்டானுங்க. அந்த சாபத்தைப் போக்குறதுக்கும் நம்ம பிரம்மா பரசுராம லிங்கேஸ்வரர்கிட்ட ரெகமண்டேஷனுக்கு வர, அவரும் சாப விமோசனம் அடைஞ்சு இங்கே கொஞ்ச நாள் இருந்துட்டுப் போனாராம். அதுனால இந்த இடத்துக்கு ‘பிரம்ம புரி’ன்னு பேர் வந்தது. அப்புறம் பிரம்மாவுக்கு அயன்னு ஒரு பேரு இருக்கிறதால ‘அயன் ஆண்ட புரம்’னு சொன்னாங்க. அதைத்தான் இப்போ சுருக்கி அயனாவரம் ஆக்கிட்டாங்க.  அதுதாங்க பார்த்தேன் ரசித்தேன் படத்துல போகுமில்ல 23c அந்த பஸ் போகிற இடம் தான். அந்த கோயிலுக்கு கொஞ்சம் பின்னாடியே சின்ன வயசுல இருந்து ஒரு முக்கியான புள்ளி வளர்ந்தது அதுதான் இன்றைக்கு ‘அயன்’ என்கிற புனைப்பெயர்ல உங்களை எல்லாம் கழுத்தறுத்துகிட்டு இருக்கு. போதுமா இதுதான் அயனாவரத்தோட ஹிஸ்ட்ரி. இன்னொரு விஷயம் சிவாஜி படம் பார்த்தீங்க இல்லை. அதுல அந்த ட்ரைவ் இன் சண்டைக் காட்சி அயனாவரத்துக்குப் பக்கத்துல இருக்கிற ஐ.சி.எப். ஸ்டேடியத்துல தான் எடுத்தாங்களாம். அதுக்கே 20 நாள் ஆச்சாம் தெரியுமா?

             ஒரு மேட்டரு தெரியுமா? அந்த பெரிய குளத்துக்கு நடுவுல இருந்த கோயில் என்னவோ இன்னும் இருக்கத்தான் செய்யுது. ஆனா அந்த குளம் தான் இருந்த அடையாளம் தெரியாம சின்ன புதைகுழியா மாறிடுச்சு. நாங்களும் ஒவ்வொரு கவுன்ஸிலர்கிட்டயா சொல்லிச் சொல்லி 20 வருஷம் கழித்து இப்போதான் அந்த குளத்தை தூறு வாருகிறார்கள். (இது 8 மாசத்துக்கு முன்னாடி இப்போ என்ன நிலைமன்னு தெரியாது). அப்புறம் அந்த கோயிலுக்கு ஒரு ராஜ கோபுரம் கட்டறதுக்கு நம்ம காஞ்சி காம கோடி வந்ததா சொல்றாங்க. அதுனால அந்த கோயில் சாமிய யாரும் குற்றம் சொல்லாதீங்க பாவம். சாமியத்தான் யாரு வேணும்னாலும் கும்பிடலாமே!

பி.கு. : என்னால் ஃபோட்டோ எடுத்து போட முடியவில்லை மன்னிக்கவும்

                சமீபத்தில் பார்த்த படம் ‘சிவாஜி’ சமீபத்தில் வாசித்துக் கொண்டிருந்த இலக்கியங்களுள் ஒன்று கம்பனின் கும்பகர்ண வதைப் படலம். ரெண்டு பேருமே காஸ்ட்லி பூவைக் காதுல சுத்தறதுல பெரிய ஆளுங்க. ஏன் ரெண்டு பேரையும் ஒப்பிட்டு எழுதக் கூடாதுன்னு தோணுச்சு. அதுதான் இந்தப் பதிவு.

                தூங்கிகிட்டு இருக்கிற கும்பகர்ணனை எழுப்பின பிறகு அவன் எழுந்து நிற்கிற காட்சியை வருணிக்கும்போது கம்பன்

             விண்ணினை இடறும் மோலி விசும்பினை நிறைக்கும் மேனி

             கண்ணென அவை இரண்டும் கடல்களிற் பெரிய வாகும்

அப்படின்னு சொல்லுறாரு (மோலி – கிரீடம்; விசும்பு – வானம்). எவ்வளவு பெரிய உருவம்!!  ஆனால் இந்தியன் படத்துல கமல் சும்மா கம்முன்னு ரேஸ் காருக்கு கீழ படுத்து உயிர் தப்புகிறாரு.

                தூங்கி எழுந்த கும்பகர்ணனோ அறுநூறு வண்டி அரிசியும், நூறு நூறு குடம் கள்ளும் நுங்கி ஏறுகின்ற பசியை எழுப்பிகிறான். காதலன் படத்து ஹீரோவோ 60 விநாடிக்குள்ள ஜி. எச். ல் இருந்து நேபியர் பாலம் வரை நெரிசல்களுக்கு நடுவே ஓடிப் போய் குண்டு வெடிக்காம தூக்கி எறிவாராம்.

                செத்து போன தம்பியை மடியில் போட்டு அழும் இராவணன் (இப்பகுதி கும்பகர்ண வதைப் படலத்தில் இல்லை) ‘வங்கக் கடலில் குளித்தால் இமய மலையில் கால் வைத்து தேய்ப்பாயே’ என்று புலம்புவான். சிவாஜியில் செத்துப் போன சிவாஜி சில மணிநேரங்கழித்து உயிர்பிழைத்து எழும்புவாராம்.

                 போர்களத்தில் ஒரு காலை வெட்டிய பிறகு கும்பகர்ணன் நொண்டி நொண்டி சண்டை போடும்போது குழியாகிப் போன இடங்களில் எல்லாம் வங்கக் கடல் நீர் வந்து நிரப்புமாம். அந்நியன் படத்திலோ ஒரு அரை லூஸு யாருக்கும் தெரியாம போஸ்டர் அடிச்சு ஒட்டி நேரு ஸ்டேடியத்துல மீட்டிங் நடத்துவாராம். இதைப் போலீஸ் கண்டுபிடிக்க முடியாம திண்டாடுமாம் (இருந்தாலும் தமிழ்நாட்டு போலீஸை இவ்வளவு மட்டமா நினைத்திருக்க வேண்டாம்).

               இப்படி ரெண்டு பேரும் சுத்துகிற பூக்களைக் கண்ணி கண்ணியா கட்டிகிட்டே போகலாம். அதுக்கு முடிவே இல்லை. ஆனா கம்பன் சொல்லுகிற ஒவ்வொரு உயர்வுநவிற்சிக்கும் ஒரு காரணம் இருந்தது. உதாரணமாக கும்பகர்ணனின் தோற்றமும் சாப்பாடும் அவன் செஞ்சோற்றுக் கடன் தீர்க்கப் பிறந்தவன் என்பதை நினைவு படுத்த வலியுறுத்த இருந்தது. அவருடைய கற்பனை இலக்கியத்தை வளப்படுத்தியது. ஆனா ஷ்ங்கர் சுத்துகிற பூவையெல்லாம் என்னன்னு சொல்லுவீங்க? கேக்குறவன் கேனையா இருந்தா எருமை மாடு கூட ஏரோப்லேன் ஓட்டும்னு எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க. அதைத்தான சீனுக்கு சீன் நிரூபிக்கிறான். இன்னுமா நம்ம கேனையா இருக்கிறது. இது சம்பந்தமா நீங்களும் சிந்திச்சிருந்தா கொஞ்சம் சிந்திட்டுப் போறது…..

நேற்று அதாங்க ஆகஸ்ட் 5 நமக்கெல்லாம் முக்கியமான நாள் தெரியுமா?

1930 ல நீல் ஆம்ஸ்ட்ராங்க் பிறந்தாராம்

1895ல ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸ் செத்தாராம்

1962ல மர்லீன் மன்ரோ செத்தாங்க

1962லயே நெல்சன் மண்டேலாவா அரெஸ்ட் பண்ணி இருக்காங்க

1984ல புர்கின பாஸோ (எங்க இருக்குன்னு கேட்க கூடாது அட்லஸ்ல ஆப்பிரிகா மேப்ல கினி வளைகுடாவுல போய் பார்க்கணும்) விடுதலை ஆச்சு

2006ல நண்பர்கள் தினமப்பா…

வேற  சனி பெயர்ச்சி

அது இல்லை… அட ஆமாங்க நம்ம வலைஞர்கள் பொது மக்கள் விழிப்புண்ர்ச்சிக்காக ஒரு மிகப் பெரிய சாதனைப் படைத்த நாள்.  இதுக்காக தமிழ்நாட்டுல இருந்துகிட்டு எம்மாம் கஷ்டப் பட்டிருப்பாங்க. நம்ம நட்சத்திர வாரத்துல அவர்களை எல்லாம் கௌரவிக்கலன்னா எப்படி. பல பேரு சுட சுட பதிவு, சுட்டுட்டு வந்த பதிவெல்லாம் ஏன் ஆறிப் போன பதிவெல்லாம் போட்டிருக்காங்க. நம்மால முடிஞ்சது இவங்க எல்லாருக்கும்   நன்றியும் பாராட்டும் தெரிவிக்க ஒரு மேடை அமைச்சுக் கொடுப்பதுதான். 

கொஞ்ச நாள்ல லட்சம் பதிவர் கொண்ட தமிழ் வலையுலகமா மாறனும்னு 

ஆசைப் படுறேன். இது நடக்குமா?  

அண்ணாநகர் முகப்பிற்கு அயனாவரத்தில் இருந்து திரும்பும்போது வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில் சிந்தாநதியின் தோரணம் வரவேற்கவே உள்ளே நுழைய நினைத்தேன்.  வாசலிலேயே மணமகன், மணமகள் பெயர் ஜொலித்துக் கொண்டிருந்தது. வலையில் உலாவரும்போது படித்த பெயர்களாகவே தோன்றியது.

அங்கே முத்துலட்சுமி அக்காவின் புன்னகை பூத்த முகம்.  “வாங்க அயன் சரியான நேரத்தில்தான் வந்தீர்கள்” என்று வழக்கம் போல் பற்ற வைத்த சரவெடி போல் பேச ஆரம்பித்துவிட்டார்.

“அது யாருன்னு தெரியுதா நம்ம சென்ஷிதான். யாரு வந்தாலும் முகம் சுளிக்காம எல்லாருக்கும் கூல் ட்ரிங்ஸ் கொடுத்து பராமரிப்பார். ரொம்ப நல்ல பையன். ஆனா என்ன ஃபேன் இருக்கிற பக்கம் மட்டும் அனுப்பிடக் கூடாது. அப்புறம் அவரை யாரு பிடிக்கிறது? போன மாசம் தென் மேற்கு பருவக் காற்று அடிச்சதுல துபாய்ல போய் விழுந்திட்டாராம் தெரியுமா? இந்தக் கல்யாண்த்துக்கு பாவம் அவரைப் பொத்தி பொத்தி கூட்டிட்டு வந்தோம். ஆமாம் நீங்க பின் நவீனத்துவத்தைப் பத்தி சொல்லுங்களேன். அது இருக்கட்டும் இப்படித் தான் எங்கப்பா சின்ன வயசுல என்னையும் என் தம்பியையும்  எங்க மாமாவோட கல்யாண்த்துக்குக் கூட்டிண்டு போனாரா.. அடடே மங்கை அக்கா.. வாங்க வாங்க ” என்று அழைத்தவர் திடீரென எதையோ பார்த்தார் போல் தன் கேமராவை எடுத்துக் கொண்டு காணாமல் போனார்.

சற்று நேரத்தில் திரும்பிவந்து “அந்த பொன்ஸ் யானை அடங்காம குப்பையில் போட்ட எச்சில் இலைகளை வாரி வாரி இரைச்சிகிட்டு இருந்தது அதுதான் அந்த “இயற்கை” காட்சிய ஃபோடோ ஒன்னு புடிச்சுட்டு வந்தேன். அப்படியே சத்திரக் காரங்க கிட்ட குப்பையெல்லாம் எப்படி போடனும்னு சொல்லிக் கொடுத்தேன். ஆமா நீங்க பின் நவீனத்துவத்தைப் பற்றி சொல்லவே இல்லையே.  அட மங்கையக்கா வந்தாங்களே காணும்.” என்று அவரைத் தேட ஆரம்பித்தார்.

அதற்குள் ஓரமாக பார்த்தால் ஓசை செல்லாவும் ‘நச்சுன்னு’ ஏதோ மங்கையக்காகிட்ட கேட்டுகிட்டு இருந்தார். எங்களைப் பார்த்ததும் இருவரும் புன்னகையோடு திரும்பி வர அதற்குள் முத்தக்காவே “என்ன அண்ணே ஏதோ எயிட்ஸ் பத்தி டவுட் கேட்கணும்னு சொன்னீங்களே க்லியரா?” என்று கண்ணை அசைத்துக் கொண்டே குறும்பாகக் கேட்டார். சென்ஷி எங்கிருந்துதான் வந்தாரென்று தெரியவில்லை காற்று வேறு கொஞ்சம் அடித்தது ” இங்க என்ன அண்ணன் பண்ணிகிட்டு இருக்கீங்க மாப்பிள்ளை கல்யாணத்தப்போ மொபைல் ஃபோனை எங்கே ஒளிச்சு வைக்குறதுன்னு தெரியாம உங்களைத் தேடிகிட்டு இருக்கார். ” என்று சொன்னதும் ஓசை செல்லாவும் ஐடியாகொடுக்க ஓடினாரு.

மங்கையக்காவும் யாரிடமோ பல்பு, ட்யூபுன்னு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென எல்லாரையும் அலற வைப்பதுபோல் ஒரு சப்தம். என்னன்னு பார்த்தா பொன்ஸ் யானைதான் பாடுவேன் எல்லாரும் அதைக் கேட்கணும்னு ஒரே அடம். அது மட்டும் இல்லாம அது ஒரு இடமா இருக்காதாம். புதுசு புதுசா இடம் மாத்திகிட்டே அலையுமாம். இது வேற கொடுமையா என்று ஓரமாக போய் உட்கார்ந்தேன். அதற்குள் ஒருவர் துண்டு சீட்டுகளை ஒன்றாய்ப் போட்டு எண்ணிக் கொண்டு இருந்தார்.

” என்ன அயன் பின் நவீனத்துவம்னா என்ன?” முத்தக்காதான்.  சரி என்று எனக்கு ஏதோ புரிந்ததை சொல்ல வாயெடுப்பதற்குள் ” அட சர்வேசன அண்ணன் இன்றைக்கு என்ன தலைப்பு? மொய் பணம் லட்சமா கோடியான்னா?” , “அட இல்லைமா இந்தக் கல்யாணம் வேணுமா இல்லையான்னு?” அதற்குள் எங்கள் இருவ்ரையும் விலக்கிக் கொண்டு ஒரு குட்டி பாப்பா ஓடி வந்தது. அவர்களைத் துரத்திய படி ‘அபி நில்லுமா? ” வாசலில் பார்த்தால் ட்ராக்டர் சத்தம் வேறு. உள்ளே ‘சூட்டு’ போட்ட இளாவும், உண்மைத்தமிழனும் வந்து இறங்கினார்கள். மேலும் கல்யாண வீட்டில் பல பார்த்த முகங்கள் பழகியது இல்லை. ஒவ்வொருத்தரையும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மாப்பிள்ளை வந்து அமர்ந்தார். ஒரு சஸ்பென்ஸா இருக்கட்டுமேன்னு நானும் அவருடைய காலில் இருந்து  கொஞ்சம் கொஞ்சமாய் எனது பார்வையை மேலே ஏத்திச் சென்றேன்.

அடே அம்மா… அப்பா……………… தூக்கம் கலைந்தது.  என்ன பயங்கரம். இன்னும் கொஞ்சம் மனசு தைரியமா இருந்திருந்தா பொண்ணு யாருன்னு பார்த்திருக்கலாம்… ச்சே  ஏன் தலை? நேர்ல எல்லாம் நல்லா தானே பேசுறீங்க. மொட்டத்தலையும் அந்த வில்லன் சிரிப்பும்  ஏங்க தூக்கத்துல மட்டும் இப்படி வந்து பயமுறுத்துறீங்க.

அடடே இன்றைக்கு 6ம் தேதியா…  நம்மளையும் மனுசரா மதிச்சு நட்சத்திரமா இருக்க கூப்பிட்டாங்களே…. சரி நமக்கும் தெரிஞ்சதை சொல்லுவோம். 

வந்தனங்க வந்தனம் வந்த சனங்க குந்தனும்…..

நீங்க பெத்த பிள்ளை நானுங்க …. ஐயா நீங்க பெத்த பிள்ளை நானுங்க

எதுவும் தப்பிருந்தா பொறுத்துக்க வேணுங்க….

உலக அளவில் சிறுகதையின் தோற்றம் அது ஒரு இலக்கிய வடிவாக வடிவெடுத்தது குறித்து நேற்று கண்டோம். இன்று தமிழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அது எப்படி மாற்றம் அடைந்தது என்பதைக் காண்போம்

தமிழில் சிறுகதையின் தோற்றம்:

கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியரின்

‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்

பொருளோடு புண்ர்ந்த நகைமொழியானும்’

எனும் டொடரால் அறியலாம்.

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும், ஆங்கில மொழியின் செல்வாக்கினாலும் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது.  வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன.  இவ்வகையில் முதன்முதலில் அச்சில்வந்தது வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குருவின் கதை’அதைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கததகள், திராவிட பூர்வகாலக்கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவைத் தமிழில் அச்சாயின.  இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் பழக்கமும் பரவத்தொடங்கியது.

இவற்றைத் தொடர்ந்து தமிழில் சிறுகதை எழுதும் போக்கு வளர்ந்தது. இவ்வளர்ச்சியின் போக்கை நான்கு காலக்கட்டங்களாகப் பிரித்து ஆராய்வது பொருந்தும்.

1. 1850 முதல் 1925 வரை

2. 1926 முதல் 1945 வரை

3. 1946 முதல் 1970 வரை

4. 1970 முதல் இன்று வரை ( இதை மட்டுமே பலவாகப் பிரிப்பர்)

1. 1850 முதல் 1925 வரை :

அச்சுவாகனமேறிய பழைய வாய்மொழிக்கதைகளெல்லாம் அந்நாளில் கட்டுப்பாடில்லாமல் வெளிவந்து கொண்டிருந்தபோது பெரும்பாலான கதைகள் பொழுதுபோக்க உகந்தவைகயாயிருந்தும் நல்லன போதிக்கும் வகையில் இல்லை. இந்நிலையில் ஆசிரியர் சதாசிவம்பிள்ளை(1820-1895)  தான் எழுதிய கதைகளைத் தொகுத்து ‘நன்னெறி கதாசங்கிரகம்’ என்ற பெயரில் வெளியிட்டார்.

வீராசாமி செட்டியார் (1855) தாம் எழுதிய உரைநடைக் கட்டுரைகளைத் தொகுத்து ‘வினோத ரசமஞ்சரி’ என்று வெளியிட்டார்.  பல வரலாற்றுக் கதைகளுடன் வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதியும் இத்தொகுப்பில் வெளிவந்தது.

ஆசிரியர் சி.வி. சுவாமிநாதய்யர் 1892ல் ‘விவேக சிந்தாமணி’ என்ற சஞ்சிகையைத் தொடங்கினார்.  இதில் 19ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் சிறுகதை எழுத்துப்பயிற்சி மேலும் முன்னேறி 20ம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் பலரது கைகளில் சோதனைகளாக வெளிப்பட்டது. ஆனால் எட்கர் ஆலன் போவவயோ, பிராண்டர் மேத்யூஸையோ அல்லடு அவர்கள் கொடுட்த சிறுகதை இலக்கண விளக்கங்களையோ அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.  எனினும் கதை சொல்லும் முறையிலும் கதைப் பொருளிலும் பாத்திரங்களைப் புதுவகையில் படைப்பதிலும் அவர்கள் பல்வேறு பாணியைச் சோதித்துப் பார்த்தார்கள் என்பது தெரிகிறது.

அ. மாதவைய்யாவும், பி. ஆர். ராஜம் ஐயரும் தமது படைப்புகளை விவேக சிந்தாமணியில் தான் முதன்முதலாக எழுதினர்.

விவேகசிந்தாமணி நிறுத்தப் பட்டவுடன் விவேக போதினி(1908) தோன்றியது.  வ. வே. சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியது விவேக போதினி ஆகும். அம்மணி அம்மாள் என்ற பெண் எழுத்தாளர்  சிறுகதைப் பொருளிலும் உத்தியிலும் ஒரு புதுமையைப் புகுத்தினார். சென்னை பச்சயப்பன் கல்லூரித் தமிழாசிரியர் திருமணம் செல்வகேசவராய முதலியாரின் அபிநவக் கதைகள் என்ற தொகுப்பு பெரிதும் பாராட்டப் பட்டது.

துவக்க காலச் சிறுகதை ஆசிரியர்களுள் மாதவைய்யா (1872 – 1925) குறிப்பிடத்தக்கவர்.  இவரது கதைத் ஹ்டொகுதியான ‘குசிகர் குட்டிக்கதைகள்’ ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானடு. இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம், விதவைகள் பட்ட துயர், வரதட்சனைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தவர். இவர் எழுதிய ‘பஞ்சாமிர்தம்’,  ’கண்ணன் பெருந்தூது’  போன்ற கதைகள் உருவ வார்ப்புக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகள் ஆகும்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882 – 1921) வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத் தகூரின் சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார்.

வ. வே. சு. ஐயர் (1881 – 1925) புதுச்சேரியில் தங்கியிருந்த காலட்டில் எழுதிய சிறுகதைகள் டான் அவரைத் தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்று இலக்கியச் சமூகம் ஒருமுகமாகக் கருத காரணமாயிருக்கின்றன.  ‘கம்ப நிலையம்’ என்ற படிப்பகத்தின் மூலம் பல கதைகளை வெளியிட்டார். காபுலிவாலா என்ற தாகூரின் சிறுகததயை மொழிபெயர்த்து காபூல்காரன் என்று வெளியிட்டார்.  குளத்தங்கரை அரச்மரம், மங்கையர்கரசியின் காதல் போன்ற கதைகளில் நிகழ்வு ஒருமை, கால ஒருமை, பாத்திர ஒருமை, உணர்வு ஒருமை என்ற சிறுகதைக்குறிய இலக்கணம் அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதைக் காணலாம்.

இலக்கிய வரலாற்றுக் கட்டத்தில் இக்காலம் ஒரு முக்கிய எல்லைக்கல். சிறுகதை உருவ அமைதி பெற்றதும் பின்வரும் தலைமுறையின்ர் இலக்கியப் பணியில் பக்குவம் பெற உந்துதல் கொடுத்த ஓர் இயக்கம் உருவாகியதும் இந்த கட்டத்தில் தான். உரைநடடயில் எளிமையும் புதுமையும் சேர்த்தது மட்டுமல்ல பலப்பல வடிவங்களிலும் சோதனனகள் செய்தனர். இவற்றிலெல்லாம் தொடாத பொருளில்லை. அரசியல், சம்யம், இலக்கியம், சமூகம், தேசியம் என அனைத்துப் பொருளிலும் கதைகள் படைத்தனர்.

( தொடரும்……

எத்தனையோ பேர் சிறுகதைகளை எழுத முயற்சிக்கிறோம். சிலர் வெற்றியும் கண்டுள்ளோம்  ஆனால் சிறுகதை பற்றிய புரிதல்கள் மிகச் சிலருக்கே  முழுவதுமாக கிடைத்துள்ளது.  அப்படிப்பட்ட புரிதல் குறித்த ஒரு தேடலின்போது கண்டெடுத்தவை….

……………………………………………………………………………………………………………………………………………

காலம் காலமாக கதை சொல்வதும் மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்துள்ளது.  நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே மக்கள் இனக்குழுக்களாக இயங்கி வந்தபோடு ஓய்வு நேரங்களில் சக மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் , உறவினர்களுடன் அளவளாவுவதற்கும், ஆதிமனிதன் புதிய சாதனம் ஒன்றைக் கையாள வேண்டியிருந்தது.  அந்நேரத்தில்தான் கதைசொல்லும் மரபு உருவாயிற்று எனக் கொள்ளலாம். உலகத்துப் பல்வேறு மொழிகளில் இன்று இக்கதை சொல்லு மாண்பு ஒரு தனி இலக்கிய வகையாக வளர்ந்து வந்திருப்பது இன்று நம் ஆராய்ச்சிக்கு முக்கிய கருவாக விளங்குகிறது.

பின்புலமும் கொள்கைகளும்:

19ம் நூற்றாண்டில் ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்க ஆகிய மூன்று நாடுகளிலும் சிறுகதைக்கு இலக்கிய மதிப்பு ஏற்பட்டிருந்தது.  அதிலும் அமெரிக்காவில் தான் சிறுகதை ஒரு தனி இலக்கிய வடிவம் என்ற கொள்கை பிறந்தது.

சிறுகதைக்கு இலக்கணம் வகுத்த அமெரிக்க ஆசிரியர்களுள் Natheniel Hawthorn,  Edger Allan Poe, Brander Mathews ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர்.

Edger Allan Poe கதைகளை விமர்சனம் செய்ய எடுத்துக் கொண்ட ஆய்வு நெறியைச் சிறுகதைப் பற்றிய இலக்கிய கொள்கையாக இலக்கிய உலகம் ஏற்றுக் கொண்டது.

அவரது கொள்கைகள்….

” சிறுகதை என்பது அரை மணிநேரத்திலிருந்து ஒரு மணி அல்லது இரண்டுமணி அவகாசத்துக்குள் ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதுதன்னள்வில் முழுமை பெற்றதாயும், அது தரும் விளைவு ஒரு தனி மெய்ப்பாடாயுமிருக்க வேண்டும்.  வாசகனின் புலன் முழுதும் கதாசிரியனின் ஆதிக்கத்தில் கட்டுப் பட்டதாயிருக்க வேண்டும்”

மேலும் சிறுகதையின் இலக்கணத்தைப் பற்றி மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் சிந்தித்த பிராண்டர் மேத்யூஸ்

“சிறுகதை என்பது ஒரேயொரு பாத்திரத்தின் நடவடிக்கைகளைப் பற்றியோ, ஒரு தனிச் சம்பவத்தைப் பற்றியோ அல்லடு ஒரு தனி உணர்ச்சிதரும் விளைவையோ எடுத்துக் கூறும் இலக்கிய வடிவம்” என்று சிறுகதைக்குரிய பண்பை விளக்கினார்.  மேலும் அவர் சிருகதை என்பது ‘சிறிய கதை’ என்ற பொருளில் இல்லாமல் ஒரு புதிய இலக்கிய வடிவத்தின் பெயரைக் குறிக்கும் தனிச் சொல் என்றா.

ரஷ்யாவில் செக்கோவ், துர்கனெவ், கொகோல், மாப்பஸான் ஆகியோரும் சிறுகதை வடிவ உணர்வைக் கொண்டுத் திறம்படக் கதி புனைந்தவர்களாவர்.

மற்ற  நாடுகளைக் காட்டிலும் அமெரிக்கர்கள்தான் சிறுகதைக்கு ஒரு முழுமையான வடிவம் கொடுப்படில் வெற்றியடைந்தவர்கள்.  அவர்களின் வாழ்க்கையில் நிலவும் வேகமும் பொறுமையின்மையும் காரணமாக இந்த வடிவம் அமெரிக்க இலக்கிய உணர்வுக்கு ஏற்புடையதாக இருந்தது.  பிராங்க் ஓ கானர், எட்கர் ஆலன் போ, ஓ ஹென்றி ஆகியவர்கள் சிறுகதை வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்த்வர்களாவர்.

இந்தச் சிறு தளத்தைப் புரிந்து கொண்டு இனி தமிழில் அதன் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து பார்ப்போம்……..

பொண்ணுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா?

அடக்கமா, அமைதியா, போர்த்திகிட்டு, நிலத்தைப் பார்த்து நடக்கணும். அப்படி இருந்தாத் தான் கும்பிடத் தோணும்.

என் மேல எத்தனை பேர் கோபத்தோட இருக்கீங்க?  இது அத்தனையும் நான் சொல்லலங்க.. நீங்க எல்லாரும் தலைவா தலைவான்னு சொல்லிகிட்டு இருக்கீங்களே அவருதான்…

மன்னன்ல விஜயசாந்திய பார்த்து, மாப்பிள்ளைல ஸ்ரீவித்யாவைப் பார்த்து, படையப்பா ரம்யாவைப் பார்த்து, முத்து மீனாவைப் பார்த்து, சந்திரமுகி நயந்தாராவைப் பார்த்து கடைசி சிவாஜிலையும் இதை விட்டு வைக்கல.

ஏங்க ஆணாதிக்க சிந்தனைக்கு ஒரு அளவே இல்லையா?  அகம்பாவம் என்பது ஆணுக்கு இருந்தாலும் சரி, பெண்ணுக்கு இருந்தாலும் சரி அது தப்புதான். அப்புறம் ஏன் எல்லா படத்துலையும் பெண்ணுக்கு மட்டும் இருக்கவே கூடாதுன்னு உங்க தலை புலம்பித் தள்ளுறாரு.  பெண்ணிய சிந்தனைவாதிகள் எத்தனனயோ விஷயத்துக்கு குரல் கொடுக்குறீங்க.  சண்டிய்ர்னு பேரு வைக்குறது தப்பு, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்னா டாக்டர்ஸ்கு பொத்துகிட்டு வருது, சினிமா விலங்குளை வதைச்சா கூட வரிஞ்சு கட்டிகிட்டு வரீங்க.  ஏன் பெண்களை வெறும் போகப் பொருளா

வணக்கம்,

என்னுடைய ஆசையை மதித்து பூங்கா இதழில் பதிவு செய்த பெரியோர்களுக்கு என் நன்றிகள்.

நான் சொல்லிய விஷயம் குறித்து இன்னும் தெளிவாக எழுதலாம் என்றும் அடுத்த கட்ட நடவடிக்கையாக இதோ e-schools பற்றி நான் படித்து தெரிந்து கொண்டவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

மென் பள்ளிகள் (e-schools) என்பது வலையுலகை மூலதனமாக வைத்து நடத்தப்படும் பள்ளிகள். இது குறித்து உலக அளவில் பல கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில இடங்களில் செயல்படுத்தப் பட்டும் வருகின்றன. இந்தியாவில் இன்னும் இது திட்ட அளவிலேயே தான் உள்ளது. ஐ.நா. வின் global e-schools and communities initiatives என்ற திட்டத்தின் மூலமாக Information and Communication Technologies ஐ கல்வித்துறையில் பயன்படுத்த பல திட்டங்கள் இயற்றப் பட்டு வருகிறது. இவர்கள் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் இதன் மூலமாகத் தொழிற்கல்வி திட்டத்தைத் துவங்க திட்டமிட்டுள்ளனர். இது மிகவும் சுலபமாக முடியும் ஏனென்றால் நாம் கற்றுக் கொடுக்க வேண்டியவர்கள் வயதுக்கு வந்தவர்களாகவே அமைகின்றனர். ஆனால் வலை மூலமாக ஒரு மென்பள்ளி உயர்நிலை பள்ளி பாடத்திட்டங்களை வைத்து செயல்படுகிறதா அது முடியுமா என்று வலை முழுவதும் தேடிய பின்புதான் அது முடியும் என்ற நம்பிக்கை கொள்வது போல் கனடாவில் உள்ள ஒரு மென் – பள்ளி தென்பட்டது. உங்கள் பார்வைக்காகவும் நமது திட்டத்திற்காகவும் இதோ அது குறித்து சில விளக்கங்கள்.

அந்த மென் – பள்ளியின் வளாகத்தை இங்கே சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள்.

முதலில் அவர்களுடைய நோக்கத்தை சற்று பார்ப்போம்.

வேலை காரணமாகவோ குடும்பச் சூழல் காரணமாகவோ பள்ளி செல்ல இயலாதவர்களுக்காக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாம். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வீட்டில் அமர்ந்த படியே அவர்களால் தங்களது படிப்பைத் தொடரமுடியும். இதுகிட்டத்தட்ட நான் முந்தையமடலில கூறியதோடு ஒத்துப் போகிறது அல்லவா. ஆனால் இந்தியாவின் சமூகப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றவாறு இவற்றை எப்படிசெய்யப் போகிறோம் என்பது தான் நமது முதல் பிரச்சனை. முதலில் நாம் இநத அமைப்புக்கு ஏற்ற மென்வளாகத்தை (domain) அந்தப் பள்ளியின் அமைப்பைப் போன்று ஒரு பக்கம் ஏற்படுத்த வேண்டும். இது முழுக்க முழுக்க software engineersஓட வேலை. நமக்கு அவ்வளவு அறிவு கிடையாதுங்க.. அப்புறம் அவர்களுக்குத் தேவையான பாட திட்டத்தை முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பாடத்தையும் எந்த முறையில் நாம் அமைக்கப் போகிறோம், அதன் விளைவை எப்படி சோதிக்கப் போகிறோம் என்பதெல்லாம் ஆசிரியர் பயிற்சி பெற்ற சிலருடைய உதவியோடு நாமே செய்து விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதைவிட முக்கியமான கட்டம் இதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கப் போகிறோம் என்பதுதான். இதற்கு நான் முழுக்க முழுக்க நம்பி இருப்பது இந்தத் துறையில் வேலை பார்க்கும் NGOக்களை தான். ஆம் அவர்களுடைய உதவியோடு பல இடங்களில் மையங்களை உருவாக்கி அங்கே இலவச கணினி வழி கல்வி வழங்க வேண்டும்.

அதோடு அந்தப் பள்ளியைத் தொடர்ந்து நடத்த மாணவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் சில வாக்கு மாறாத ஆசிரியர்களும் தேவை.

இவ்வளவுக்கும் தேவையான பணத்திற்கும், ஆளுதவிக்கும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நிறைய மூலங்கள் சிதறிக் கிடப்பது உங்களுக்கே தெரியும். அவர்கள் அனைவரையும் ஒன்றாகத் திரட்டி திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வலைஞர்களின் ஆதரவைத்தான் மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன். அது எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு விடை பெறும்…

அயன்.

பிரேம்குமார் அவர்களின் அழைப்பை ஏற்று எட்டு ஆட்டம் விளையாடலாமா வேண்டாமான்னு ரொம்ப யோசிச்சு இன்றைக்கு நானும் எட்டெடுத்து வச்சிட்டேன்.  ஏன்னா இது வரைக்கும் நான் என்னைப் பற்றிய விஷ்யங்களைப் பகிர்ந்து கொண்டதே இல்லை.

1.  எனக்கு நடிப்புன்னா ரொம்ப பிடிக்குமுங்க. நான் மட்டும் அண்ணா பல்கலைல பொறியியல் சேரலைன்னா ஒரு நடிகனாகவோ அல்லது இயக்குனராகவோ மாறி இருக்கலாம்.  இப்படி தான் நான் 8வது படிக்கும்போது ஒரு கன்னட நாடகத்தில் (நான் படித்தது கன்னட சங்க உயர்நிலை பள்ளி, அயன்புரம்) என்னை சித்தூர் ராணியின் தளபதியாக நடிக்கச் சொன்னாங்கா கதைப் படி நான் தாங்க ஹீரோ (கதை இல்லைங்க நம்புங்க..)  ஆனால் நமக்கு கன்னட்ம் தெரியாது. என்ன செய்ய என் நண்பர்களின் உதவியோட எல்லா வசனங்களையும் ஹிந்தியில எழுதி அதற்கு அர்த்தம் புரிந்து ரொம்ப நல்லா தட்டி வச்சு நடிக்கைறதுக்கு மேடையில ஏறியாச்சு.  அப்பவே ஏன் கன்னட நாடகத்துல தமிழ் பைய்னை நடிக்க வைக்குறீங்கன்னு எங்க மேலிடத்துல இருந்து ஒரு சலசலப்பு இருந்தது.  ஆனால் என் திறமையை மதிச்சு ஏத்தி விட்டுட்டாங்க.  அதுல ஒரு சீன்ல ராணிகிட்ட ஆவேசமா பேசிக்கொண்டே உடை வாளைத்தூக்கிக் காட்டனும். இதுதான் அந்த நாடகத்துலயே ஹைலைட்டு. ஆனா பாருங்க அன்றைக்கு உடைவாள் கிடைக்கலன்னு மிகிஸியைச் சுரண்டறதுக்கு இருக்கிற கத்தில கோல்டு பேப்பர் ஒட்டீ கொடுத்துட்டாங்க. நானும் ஆவேசமா உருவினதுக்கு அப்புறம் என் இடுப்பில கட்டி இருந்த பட்டி இருகிட்டது. அப்புறம் அந்த உடைவாலைச் செருகிவிட்டு பேச வேண்டிய ஆவேசமான வசனங்கள் அதைச் செருக முடியாம கஷ்டப் படும்போது மறந்திடுச்சு. தமிழ்னாலும் பூந்து விளையாடலாம் ஆனால் கன்னடம் என்பதால ரொம்பத் திண்றிப்போனேன்.  நல்ல வேளையா சித்தூர் ராணியா நடிச்ச கன்னடப் பொண்ணு கொஞ்சம் எடுத்து கொடுத்து காப்பாத்திடுச்சு.

2. எனக்கு என்னோட அம்மாவை ரொம்ப பிடிக்குமுங்க.  நான் பள்ளி படிக்கும் போதில் இருந்து நான் எந்த நாடகத்துல கலந்துகிட்டாலும், போட்டில கலந்துகிட்டாலும் கண்டிப்பா என் அம்மா தான் கூட இருந்து தயார் பண்ணி அனுப்புவாங்க.  இன்றைக்கு நான் இங்க வந்து இவ்வளவு வருஷம் மனம் தளராம போராடுறதுக்கு என் அம்மா இல்லைன்னா முடிஞ்சிருக்காது.

3.  என்னோட அப்பாவைப் பற்றி சோல்ல நான் மறக்ககூடாது. ஒரு சாதாரண மளிகைக் கடை வியாபாரிக்கு கோவில்பட்டில 4வது மகனா பிறந்து, ஒரு குழந்தைக்கு நியாயமா கிடைக்க வேண்டிய எந்த வசதியும் கிடைக்காத பட்சத்திலயும் தன் சொந்த முயற்சியாலேயே தென்னிந்திய பலுதூக்கும் போட்டியில முதல் பரிசு வாங்கி இன்றைக்கு சென்னைல ஒரு கௌரவமான வாழ்க்கைக்கு விதை போட்டது அப்பாதான். எனக்கு வெற்றி கிட்டாத கட்டங்களில் எல்லாம், இன்னும் வெற்றி பெற என்ன செய்யப் போற அப்படிங்கிற கேள்விலயே அடுத்து எடுத்த காரியத்தை விடக் கூடாதுன்னு ஒரு வேகம் வந்திடும்.

4. நாலாவதா எனக்குப் பிடிச்ச ஆளு சிவம். இவரு இருக்காருன்னு சிலர் நம்புவாங்க சிலர் இல்லைன்னு வாதிடுவாங்க. ஆனால் நான் எனக்குள்ள இருக்கிற பூரணத்துவம் (perfection) தான் அவன் நம்புவேன். எனக்குள்ள இருக்கிற ஒரு ஆளா ஆயிட்டதால நிறைய சண்டை நடக்கும், சமாதானம் இருக்கும்.  ஆனால் என்றைக்கும் விட்டுப் பிரியனும்னு  நினைச்சதில்லை.

5.  என்னோட கற்பனை வளரக் காரணமா இருந்த கே. பாலசந்தரும், அது மங்கிப் போக காரணமா இருக்கும் என்னோட படிப்பும்.  கே.பியை பற்றி ஒரு புத்தகமே எழுதுவேன். கதாநாயகர்களின் புகழைப் பரப்ப மட்டும் படம் வந்து கொண்டிருந்த காலத்துல, கதையை மட்டுமே நம்பி படம் எடுக்கத் துவங்கியவர்களில் முன்னோடி. அவருடைய பார்ப்பனத்துவம் அதிகமான விமர்சனத்துக்கு ஆளானாலும் அவருடைய முக்கியமான படைப்புகள் இன்றும் மனதில் நிற்கும்.  “returned with thanks”னு சொல்கிற சிந்து, “என்னை 24 மணி நேர நர்ஸா இருக்கவிடுங்கன்னு ” கேட்கிற நந்தினி, தொடர்கதையா விளங்குகிற அந்தப் பெண், அவர்கள், சொல்லாத்தான் நினைக்கிறேன், கல்கி, புதுப்புது அர்த்தங்கள், கல்யாண அகதிகள், கையளவு மனசு.. இப்படி அடுக்கிகிட்டே போகலாம்.  முழுக்க முழுக்க பெண்களை மையமாக வைத்து படம் செய்ததில் பெரிய் ஆள் பாலு.  எனக்கும் நிறைய இது மாதிரி நல்ல படங்கள் எடுக்கணும்னு ஆசை.  சரி அதை விடுங்க. அதுதான் இன்னும் கொஞ்ச வருஷத்துக்க்காவது நிறைவேறாதே!

6. எனக்குள்ள இருக்கீற முரண்பாடுகள் பற்றி சொல்லியே தீரணும். “ஓநாயோட பார்வைல இருந்ந்து பார்த்தாதான் அது பக்கத்து நியாயம் புரியும்னு சொல்லுவாங்க” அதுனால நான் ரெண்டு பக்கத்து நியாயத்தையும் பார்த்து குழம்பிப் போயிடுவேன். மேல்தட்டு உண்மையை உணார இன்னும் நாளாகும்னு நினைக்கிறேன்.  உதாரணத்திற்கு பெண்கள் கல்லூரிக்கு ஜீன்ஸ் போடக்கூடாதுன்னு வாதாடுகிற கும்பலும் அதுல என்ன தப்பு இருக்குன்னு கேட்கிற கும்பலும் நம்பளை ரோம்ப குழப்ப்புவாங்க.  ஆனா நான் இப்பொ அது முழுக்க முழுக்க பெண்ணோட சுதந்திரம்னு விட்டுட்டேன்.  ஏன்னா சுடிதார், புடவைன்னு கட்டிகிட்டு வரணும்னு சொல்கிறவர்கள் வெறும் வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு கல்ல்லுரிக்கு வருவார்களான்னு தான் கேட்கிறேன்.

7.  என்னை எப்பையுமே குழப்புகிற ஒரே விஷ்யம் மரணமுங்க். சாதிக்கணும்னு நினைத்து போராட தயார் பண்ணிகிட்டு இருக்கும் போது ஏதாவாது ஒரு மரணம் பற்றிய தகவல் வாழ்க்கையோட வெறுமையை மாற்றி மாற்றி உணர்த்தும்.  வருஷம் 16 பார்த்து இருக்கீங்களா?  அது மாதிரிதான் நான் எடுத்த வேலைய முடிச்சு வீடு திரும்புவதற்குள் எல்லாரும் ஃபோட்டோவ்வில தான் தொங்குவாங்க போல இருக்கு.  தாத்தா, பாட்டி, பிரியமான பெரியப்பா, பெரியம்மா, பக்கத்துவிட்டு சந்திராக்கா, அண்ணன் பைய்ன் யதுநந்தன்(7 வயசு)…  இப்படி இந்த ஆறு வருஷம் ரொம்ப கசப்பான மருந்தைதான் கொடுத்து இருக்கு.

8. இப்போ  நான் துவங்கனும்னு நினைக்குற மென் – பள்ளி (e-school).   இதுக்காக ஒரு பதிவு போட்டும் கொஞ்சமான பதில் மட்டும் வந்திருக்குதேன்னு ஒரு சின்ன வருத்தம் இருந்தாலும் நம்மளால முடியும்னு எங்கையோ மனசுல ஆழமான ஒரு நம்பிக்கை இர்ருக்கத்தான் செய்யுது.

அப்பா ஒரு வழியா நம்மளைப்பற்றி எழுதி முடிச்சிட்ட்டேங்க.

ஆனால் இந்தப் போட்டியை நானே முடிச்சுவச்சதா இருக்கட்டுமே.  அதுனால நான் யாரையும் கூப்பிடலை ரைட்டா……………

« புதிய இடுகைகள் - பழைய பதிவுகள் »