அயனீகம்
சூன்யத்தில் இருந்து
சூன்யத்தை நோக்கிய
பயணத்திற்கான மாற்றுக் கருத்து
நரம்பியல் வள்ர்ச்சியில்
முதிர்நிலை அடைந்த
நரனின் மனத்தில்
நாளும் உதித்திடும் கேள்வி
ஏன்?
வெற்றிக்கும் தோல்விக்கும்
நடுவே ஊசலாடும்
உயிருள்ள வாழ்க்கைதான்
ஏன்?
வறுமைக்கும் செழுமைக்கும் நடுவே
பந்தாடும் பருவந்தான்
ஏன்?
தக்கோன் நிலைப்பான்
என்றக் கூர்தலறக் கோட்பாடு
சொன்னான் டார்வின்
அமைதியை நோக்கிய
ஆன்மிகப் பயணந்தான்
வாழ்க்கை
மதங்கள் கூறும் மாற்று அறிக்கை
ஒரு ஜான் வயிற்றுக்காக
மூளை வளர்ந்தது தான்
எத்தனை! எத்தனை!!
முளைத்த கருத்துகள்
எத்தனை?
சாதனைகள் எத்தனை?
அதற்கான சோதனை எத்தனை?
சண்டைகள் எத்தனை?
விரியும் ஏற்றத்தாழ்வுகள்
எத்தனை?
இத்தனைப் போராட்டங்களுக்குப்
பின்னும் மனிதன்
விரும்புவது ஒன்றே ஒன்றுதான்
‘அமைதி’
சிலருக்கு சோறு கிடைத்தால் அமைதி
சிலருக்கு வீடு கிடைத்தால் அமைதி
சிலருக்கு இவற்றிற்கான கூலி கிடைத்தால் அமைதி
அதன்பின்னும் முன்னேற்றம் தேடி
தொலைத்து விடுவது அமைதியைத் தான்…
பின்பு தேடியலைவதும் அமைதியைத் தான்…
தவம் – அமைதியைத் தேடி தவம்
அறிவியல் சாதனை தேடி தவம்
‘ஏன்’ என்னும் கேள்விக்காகத் தவம்
இத்தனை தவங்களின் விளைவாய் வந்த
சாதனை செல்லும் பாதைதான் எங்கே?
தத்துவங்கள் காட்டும் திசைதான் எங்கே?
வயிறு நிரப்ப வழி சொல்வது விஞ்ஞானம்
நரம்பியல் வழியில் தீர்வு சொல்வது மெய்ஞ்ஞானம்
இவை இரண்டையும் இணைக்கும் பாலம் தான் புது ஞானம்
ஆம் அது தான் ‘அயனீகம்’
சோற்றைத் தேடி தொலைந்து போன
சிந்தனை வளர்ந்து சிதறிப் போன
அமைதி இப்படியும் வரலாமோ?
நரம்பியல் வளர்ச்சியில் இயற்கையின் விளைவாகவோ
நரனின் முயற்சியில் செயற்கை முறையிலேயோ
மனிதனுக்குள்ளே பச்சையம் வந்தால்…..
சூன்யத்திற்கு பின் ஓரணு உயிர்தான்
மானுடத் துவக்கம்
சூன்யத்திற்கு முன் பச்சையம்
முளைத்த மக்கள் தான்
மானுட முடிவோ….
நின்ற இடத்தில் சூரிய தயவில் மனிதனுக்குள்ளே
சாப்பாடு தயார்….
ஓட்டலுக்கு வேலையில்லை,
வயல் காடோ மாடி வீடு
உடையோன் இல்லான் பேதமில்லை
கலைதாகமும் அறிவுப் பசியுமன்றி
வேறெதுவும் இல்லாத
அந்த முடிவுக்கு முந்தைய நாள்
எந்நாளோ?