முத்தக்காவின் வற்புறுத்தலின் பேரிலும், ரொம்ப நாளா பதிவு எழுதனும்னு நினைச்ச தலைப்பாகவும் இருக்கவே நாம எல்லாம் சொல்ல மறந்த சில சொற்களை நினைவூட்டி எழுத ஒத்துக்கிட்டேன்.
ஆனா எழுத உட்கார்ந்த பிறகுதான் தெரிந்தது சொல்லிலக்கணம் அவ்வளவு சுலபம் இல்லை ராசான்னு. எங்களோட முந்தைய தலைமுறையினர் அவ்வளவு பேரும் மதுரை தாண்டி கோவில்பட்டி. அதுனால அவங்க பயன்படுத்திய பல சொற்கள் தெற்கு வட்டார கிளைமொழிக்கு உட்பட்ட சொற்களாகப் போனதால இப்போ பல சொற்கள் நாங்கள் பயன்படுத்துவதே இல்லை.
ஆனா எங்க ஆச்சி (எங்க ஊருபக்கம் அப்பாவைப் பெத்தவுகளும் ஆச்சிதான் அம்மாவைப் பெத்தவுகளும் ஆச்சிதான், இப்போ மனோரமா தவிர அங்க எல்லாரும் பாட்டி ஆயிகிட்டு வாராக என்ன செய்ய அதுலயும் நிறைய கிரானீஸ் உருவாகிகிட்டு வாராக.. ம்ம்) பேசினதையெல்லாம் நினைச்சு பார்க்க ஒரு சந்தர்ப்பம்.
“பரண்ல இருக்க அந்த வாளியை எடுத்துதான்னு” எங்க ஆச்சி எங்க மாமாவை நச்சரிச்சது ஞாபகத்துக்கு வந்தது. இப்போ சென்னைல மட்டுமில்ல அங்கயும் அதிகமா லாஃப்ட்டும், பக்கெட்டும் தான் வளர்ந்து வருகுது.
இப்போ எல்லாம் ‘முத்தம் (முற்றம்)‘ வச்சு வீடு கட்ட இட வசதியே பற்றாம போயிடுச்சு அதுல எங்க வார்த்தைய ஞாபகம் வச்சுக்கிறது. சின்னதா ஒரு வாசல் வச்சு ரோட்டுமேல கோலம் போடுகிற கலாச்சாரம் தான பெருகி வருகுது.
எங்க ஆச்சி வீட்டுல ஒரு அழகான கிளி வளர்த்தோம். அது யாரு என்ன பேசினாலும் அப்படியே பேசும். முதல் தடவையா கிளியால அவ்வளவு பேச முடியும்னு தெரிஞ்சிகிட்டேன். ஊருக்குப் போகும்போதெல்லாம் எங்க ஆச்சி சொல்லுவாங்க ‘சுவத்துல கெவுளி/கவுளி (பல்லி) கத்துனாகூட இந்த கள்ளபயபுள்ள அது மாதிரியே கத்தும்’ . அதை ஏன் கள்ளப்பயபுள்ளன்னு சொன்னோம்னா அது நாங்க அதுகூட விளையாடலைன்னா எங்க சின்ன சின்ன பென்சிலை களவாண்டுட்டு (திருடிகிட்டு) போயிடும். அப்போயெல்லாம் அந்தக்கிளியை ‘பவுசு(பவிசு-செருக்கு) கொழிச்சு ஆடாத கிளியேன்னு’ எங்க ஆச்சி எவ்வளவு வையும்(வைதல் – திட்டுதல்)எவ்வளவு அறிவு இல்லை ஆனா அது கூண்டுக்குள்ள போகவே போகாது. ஒரு தடவை ஊருக்குப் போனபோது அது இல்லை. ஆச்சியை கேட்டதுக்கு ‘களவானி கிளி… கூண்டுக்குள்ள போக மாட்டேன்னிடுச்சு. ஒருநா ராவுல(இரவுல) ஒரு வெரு (வெருகு – ஆண்பூனை; காட்டுப்பூனை) கவ்விகிட்டுப் போயிடுச்சு’. அப்போதான் என் வாழ்க்கையிலேயே முதல் தடவையா ஆண்பூனைக்குன்னு தனியா வெருகுன்னு ஒரு வார்த்தை இருக்கிறதையே தெரிஞ்சிகிட்டேன்.
இதையெல்லாம் விட எங்க சித்தப்பாவுக்கு நாகர்கோயிலை சேர்ந்தைவங்களைத்தான் முடித்திருந்தோம். அந்த சித்தியோட மொழியில நாஞ்சில் தமிழ் நடனமாடும். எல்லாரும் அதுல மலையாள வாடை இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனால் தொல் திராவிட மொழியில இருந்த பல தமிழ் சொற்களை நாஞ்சில் தமிழ் பாதுகாத்து வச்சிருக்கு. இப்போ எல்லாம் எங்க சித்தப்பா பிள்ளைங்களே யாரையும் ‘விளி‘க்கிறது இல்லை. கூப்பிடத்தான் செய்றாங்க. அப்போதான் அவங்க பயன்படுத்துற வசவு(வசை- திட்டுதல்) ஏதாவுது இருக்கான்னு யோசிச்சு பார்த்தப்போ அடிக்கடி சொல்லுகிற ‘பட்டி‘ நினைவுக்கு வந்தது. அதைப் பற்றி சொற்களஞ்சியத்துல போட்டிருக்கான்னு திருப்பி பார்த்தப்போ பட்டிக்கு பழந்தமிழ்ல இவ்வளவு அர்த்தங்கள் இருந்தது தெரிந்தது. சுவாரஸ்யமா இருக்கவே உங்கள் பார்வைக்கு. பட்டின்னா நமக்கெல்லாம் மன்னிக்கணும் எனக்கெல்லாம் தெரிந்தது நாய், சிற்றூர் மட்டும் தான். களவு, தெப்பம், மகன், விபசாரி, அட்டவணை, தெப்பம், ஆட்டுக்கிடை,பசுக்கொட்டில், விக்கிரமாதித்தனுடைய மந்திரி, பாக்குவெற்றிலைசுருள், பூச்செடிவகை, காவலில்லாதவர், சீலை, இடம் இப்படி இத்தனை அர்த்தத்தை மறந்ததைப் புரிஞ்சுகிட்டேன்.
இந்த காலத்துப் பெண்கள் சீலையையும் மறந்துட்டாங்க, இரவிக்கையையும் மறந்துட்டாங்க. மன்னிக்கணும் அந்த சொற்களைத்தான் சொல்கிறேன். எப்படி ஞாபகம் வச்சுப்பாங்க ஆம்பளைங்க சேரியும் ப்ளவுசும் தான வாங்கி தாராங்க.
அடுப்படிங்கிற வார்த்தையயே நாம எல்லாம் மறந்து தான போயிருக்கோம். மடப்பள்ளி என்கிற வார்த்தையெல்லாம் எங்க ஆச்சி காலத்துலயும் பயன்படுத்தினாங்க. இப்போ எல்லாம் கிச்சன் தானே. அதுக்கு மேல எங்க ஊர் பக்கம் உள்ளி (வெங்காயம்) என்கிற சொல்லின் வழக்கும் குறைந்தே வருகுது.
உள்ளின்னு சொன்னவுடனே எனக்கு ஒரு திருக்குறள் ஞாபகத்துக்கு வருகுது.
“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து”
ஊக்கமுடைமைல வரும். நாம் நினைக்க வேண்டியவை எல்லாம் உயர்வானதாக இருக்கணும்னு சொல்லும்போது இப்படி சொல்லுவாரு. உள்ளுதல் அப்படின்னா நினைத்தல், ஆராய்தல் போன்ற பொருள்ல பல இலக்கியத்துல பயன்படுத்தி இருக்காங்க. நினைத்தலுக்கு இவ்வளவு அழகான ஒரு வார்த்தை தமிழில் இருந்து நாம அதை பயன்படுத்துறது இல்லையேன்னு நான் பத்தாங்கிளாஸ் படிக்கும் போதே ‘திங்க்’ பண்ணதுண்டு.
இந்த இடத்துல எனக்குப் பிடிச்ச இன்னொமொரு செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திருக்குறள்ல கல்லாமை அதிகாரத்துல
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்
அப்படின்னு ஒரு குறள் வரும். அதாவுது படிக்காதவன் சொல்லுகிற செய்தி நல்லது மாதிரி தெரிஞ்சாலும் படிச்சவங்க அவங்கள படிச்சவங்க கூட்டத்துல ஏத்துக்க மாட்டாங்களாம். இங்க படிக்காதவங்கன்னு சொல்வது அனுபவத்துலயும் கேள்விலயும் கல்விலயும் அறிவை சேத்துக்காதவங்கன்னு வச்சிகிட்டா நல்லா இருக்கும். நம்ம தலைவரோ தனுஷோ இல்லை. இதை பரிமேலழகர் சொல்லும்போது அது எதுனாலன்னா அவங்க சொல்வது ‘ஏரல் எழுத்து போல்வதோர் விழுக்காடாம்’. அப்படின்னு சொல்லுவார். அதாவது நத்தை ஊர்ந்து போகும்போது மணல்ல எப்பவாவது அதுங்க போன தடம் எழுத்து மாதிரி தெரியலாம் அதுக்காக அது படிச்சிட்டு எழுதுச்சுன்னு ஏத்துக்கவா முடியும். ஏரல் நத்தைக்கான அழகான சொல் இல்லை. மேலும் இப்போ எல்லாமே பர்செண்டேஜ் தான் விழுக்காடு எங்க?
எங்க பக்கத்து வீட்ல…
திருமகனே திருமகனே நீயொரு நாழிகை நில்லாய்
வெண்ணிற புரவியில் வந்தவனே…ன்னு பாட்டு பாடிகிட்டு இருக்கு. புரவிங்கிறது கூட குதிரைக்கு அழகான வார்த்தை தான். அந்த வார்த்தையை மறக்காம இருக்க உதவி புரிஞ்ச வைரமுத்துவுக்கும் ஒரு சலாம்.
ஏதோ கடலோரத்தல நத்தை ஊர்ந்து போகிறமாதிரி என் நினைவலைகள்ல ஊர்ந்து போகியிருக்கேன். ஏரல் எழுத்து மாதிரி ஏதாவுது சில சொற்கள் உங்கள் பேச்சு வழக்கிற்கு இல்லைனாலும் எழுத்து வழக்கிலாவது மறக்காம இருக்க உபயோகப்படும்னு நினைக்கிறேன். ஏதாவுது தப்பு இருந்தா ஏரல் எழுத்து தான்னு மறந்திடாதீங்க. ரைட்டா?
என் நினைவுகளைத் தொடர்ந்து இன்னும் மறந்து போன சொற்களை நினைவு படுத்த நான் அழைப்பது
சென்ஷி
என் பதிவுகளில் பல அறிய உண்மைகளைச் சொன்ன நாக இளங்கோவன்
மேலும் முன்னாள் அயன் ஆண்ட புர வாசி பாலபாரதி
Read Full Post »