அட அந்த ப்ரியாவுக்கு என்ன கள்ளத்தனம் . எந்த ப்ரியான்னு கேட்குறீங்களா அதாங்க ‘மின்சார கனவு’ல கன்னிகாஸ்த்ரியாகப் போறேன்னு சொல்லுமே அதுதான். அதுக்காக நம்ம வைரன் எவ்வளவு அழகாக இந்த வரியைத் தேடிப்போட்டு இருக்காரு. ஆமாங்க அவரு நிச்சயமா திருக்குறள்ல இருந்துதான் இதைப் போட்டிருப்பாரு. குற்றங்கடிதல் அதிகாரத்துல ஒரு குறள்
காதல காதல் அறியாமை உய்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
அதாவுதுங்க ஒரு அரசன் தான் கடிய வேண்டிய குற்றங்கள் என்னென்னன்னு சொல்லும் போது கடைசில இப்படி முடிக்குறாரு. தனக்கு விருப்பமானவற்றை அந்த அரசன் அந்த விருப்பத்துக்குக்கூட தெரியாம நுகர வல்லவன் ஆனால் அவனை பகைவர்கள் அழிக்க வழியே இல்லைன்னு சொல்றாரு.
அவரு குற்றம்னு இந்த அதிகாரத்துல சொல்றது 6 அவை செருக்கு, சினம், காமம், கஞ்சத்தனம், மானம், உவகை… இதுல கஞ்சத்தனம், மானம், செருக்கு இவற்றோட தீமைகளைப் பற்றி 8வது 9வது குறள்ல விளக்கினவரு கடைசி குறளை இப்படி அமச்சிருக்காரு. அதாவது கோபம், காமம், உவகை மூன்றும் முற்றிலும் அழிக்க முடியாததால அந்த மூன்றையும் அந்த மூன்றுக்கும் அறியாம நுகர வேண்டுமாம். இதை நான் சொல்லல நம்ம பரிமேல் அழ்கர் சொல்றாரு. நல்லா இருக்கு இல்லை.
அப்போ சாமியாரா போகனும்னு நினைக்குற ஒரு பொண்ணு காதலிக்க ஆரம்பிச்சா அவ மானம் அவளோட கொள்கை அழியாமல் காக்கப்படணும்னா இப்படித்தான அந்த காதலுக்கே அறியாமல் நுகர வேண்டியதா இருக்கும். வைரன் சரியான முறையில வார்த்தைகளைத் தேடிப் பொறுக்கிதானே எழுதி இருக்கான். அவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இப்போ அந்த பாட்டைக்கேட்கும்போது அந்த பெண்ணுக்குள்ளேயே நம்மால போய்வர முடியும் இல்லையா?