Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘politics’

சமீபத்தில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்ட 123 உடன்பாடு நல்லதா கெட்டதா என்ற சர்ச்சை வலைக்குழுவில் நடந்து வரும் இந்த வேளையில் ஏதோ அதைப் பற்றி எனக்குத் தெரிந்த செய்திகளை இங்கே தர நினைத்து இதோ இந்தப் பதிவை எழுதுகிறேன்.

அமெரிக்கா அவர்கள் நாட்டில் செல்லாத திட்டத்தை இதோ இங்கே “இந்தியக் குப்பையில்” கொட்ட நினைப்பதாகப் பலர் கருத்து தெரிவித்து வரும் இந்நிலையில் எனக்கு தெரிந்தவை சில –

 1. இந்திய –  அமெரிக்க கூட்டு முயற்சியில் அணு சக்தி உற்பத்தி செய்வது குறித்தான பேச்சு காங்கிரஸ் துவங்கி வைத்தது அல்ல.  அது  1998ன் போது நாம் நடத்திய அணு ஆயுத சோதனைக்குப்பின் வந்த அமெரிக்க தடையை விலக்க ஜஸ்வந்த் சிங்-தால்பூட் நடத்திய பல ஆண்டு விவாதங்களின் விளைவாகும்.  இன்று பா. ஜ. கட்சி இதை எதிர்ப்பது எதிர்கட்சி என்ற மட்டிலுமே தவிர மொத்த உடன்பாட்டை எதிர்க்க வில்லை.

2. தோரியம் கொண்டு அணு சக்தி உற்பத்தி செய்ய யுரேனியமும் தேவை. ஆனால் இந்தியாவில் இருக்கின்ற யுரேனியம் நம்து இன்றைய தேவையை பூர்த்தி செய்யுமே ஒழிய நாளைய தேவைக்கு எப்படியும் வெளிநாட்டு உதவி தேவைப்படும். அதற்கு உலக நாடுகள்,நாம் NPT ஒப்பந்தத்தில் அணு ஆயுதம் இல்லாத நாடு என்ற அளவில் சேர மறுத்ததினால், போட்ட தடையை விலக்க வேண்டும். இன்று 123 உடன்பாட்டின் மூலம் இந்தியாவும் ‘பொறுப்புள்ள அணு ஆயுத நாடு’ என்ற அங்கீகாரம் கிடைப்பதினால் விலகும். அப்பொழுதுதான் யுரேனிய வர்த்தகத்தில் நாம் ஈடுபட முடியும்.  முப்பது வருடங்கள் நமக்குக்கிடைக்காத அங்கீகாரம் உள்நாட்டுக் கட்சிப் பூசல்களினால் செத்துப் போவது நியாயம் தானா?

3. மேலும் இந்தியாவின் மின்சார உற்பத்தி சக்தி வளர்ந்து வரும் வேளையில் நமது தேவைகளும் வலுக்கொண்டு வருகிறது.  சுயசார்பு இத்துறையில் வேண்டுமானால் நிச்சயம் நாம் அணு சக்தி உற்பத்தியை பெருக்க வேண்டும். அதற்கு யுரேனிய வர்த்தகம் தேவை. ஈரானோடு கொண்ட ஒப்பந்தம் இன்று ஈரான் அதிக காசு கேட்பதால் கிடப்பில் இருக்கிறது. மேலும் ரஷ்யாவோடும் எரிவாயு வாங்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.   இன்னும் ஏழு ஆண்டுகளில் மின் உற்பத்தியில் இந்தியா தந்நிறைவு அடைவது மேற்கூறிய எல்லா திட்டங்களும் செயல் பட்டால் ஒழிய சும்மா நிகழாது.  இதில் அணுமின் உற்பத்திப் பெருக்கம் முக்கியமானது.

4.  அமெரிக்கா இந்தத் திட்டத்தின் மூலம் நம்மை அவர்களது கூட்டணியில் இணைக்க முயல்கிறது என்பது வெறும் கட்டுக் கதை.  அவ்வளவு எளிதாக நாம் நமது உரிமையை ஒப்படைக்க முடியாது. மேலும் 123 ஒப்பந்தம் என்பதில்,  நான் முழுவதுமாக படித்த அளவில் நமது உரிமைகளை ஒப்படைக்க எந்த குறிப்புகளும் இல்லை.  இன்று காங்கிரஸ் என்றல்ல எந்தக் கட்சியாயினும் இதில் ஈடுபட்டிருக்கும். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் கண்டிப்பாக இதைப் பற்றிய விவாதம் இந்த ஒப்பந்த்தை முடிப்பதில் தான் வரும். அப்படி வரவில்லை என்றால் நிச்சயம் நமது அரசியல் தலைவர்கள் நம் கண்களைக் கட்டி கிணற்றுக்கு கூட்டிச் செல்கிறார்கள் என்பது உறுதி.

5. இந்திய அணு சோதனைத் துறை விஞ்ஞானிகள் இந்த ஒப்பந்தம் குறித்து பயப்படுவது இதன் விளைவுகள் குறித்தே. அதுவும் இந்திய அணு சோதனைக் கூட வசதிகள் உலகத் தரம் வாய்ந்ததாக இல்லாத நிலையில் நாம் 14 சோதனைக் கூடங்களை IAEA வின் சோதனைகளுக்கு உட்படுத்தினால் எங்கே நமது அங்கீகாரம் பரிக்கப் படுமோ என்பது குறித்து தான். இதற்கான சான்றுகளும் பல விஞ்ஞானிகளின் பேட்டிகளும் இருக்கின்றது. தேவைப்பட்டால் தனி மடலில் அனுப்பி வைக்கப்படும்.

6. மேலும் இந்த 123 ஒப்பந்தம் நம்மோடு மட்டும்ல்ல சீனாவோடும் அமெரிக்கா போட்டுள்ளது.  என்ன சீனா NPT ஒப்பந்தத்தின் கீழ் அணு ஆயுதம் கொண்ட நாடாக அங்கீகரிக்கப் பட்டுள்ளதால் அதற்கேற்ற சலுகைகள் அதில் அடங்கும்.  நமக்கு அந்த அங்கீகாரம் இப்பொழுதுதான் கிடைக்கப் போகிறது என்பதை நாம் மறக்க வேண்டாம்.  மேலும் இது கிடைத்தால் தான் ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பினர் ஆக முடியும் என்பது வேறுபக்கத்தின் உண்மை.  இது கிஸ்ஸிங்கர் நேற்று மிரட்டினார் என்பது சென்ற ஓராண்டு பத்திரிக்கைகள் தரும் செய்திகளை மட்டும் நம்பி கொடுக்கும் பொய் பிரச்சாரம் ஆகும்.  இந்திய வெளியுறவு வரலாற்றை முழுவதுமாகப் படிக்காத சிலரின் வாதங்களின் பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்ப வேண்டாம் என்பது தான் என் வாதம்.

கட்டாயம் நம் உரிமை பரிபோகுமோ என்ற பயம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது.  அந்த பயத்தைப் போக்க வேண்டியதுதான் காங்கிரஸ் அரசு செய்ய வேண்டிய காரியம்.  இதற்கு மாற்றுக் கருத்து நிலவிடினும் வாதத்தில் பங்குகொள்ள நான் தயார்.  நீங்கள் தயாரா?

Read Full Post »